போளூரை அடுத்த குருவிமலை அருகே சனிக்கிழமை காரும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் விவசாயி உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகேயுள்ள முருகாபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணு மகன் செந்தில்குமார் (30), விவசாயி.
இவர், அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பரான வெங்கடேசன் மகன் நாராயணனுடன் (தையல் தொழிலாளி), இருசக்கர வாகனத்தில் வேட்டவலத்தில் உள்ள உறவினரை பார்த்துவிட்டு, சனிக்கிழமை போளூர் நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
அதே நேரத்தில், சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் தனது குடும்பத்துடன் திருப்பதி சென்றுவிட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
போளூர் அருகே குருவிமலை பகுதி திருவண்ணாமலை சாலையில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில், செந்தில்குமார் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உடன் வந்த நாராயணன் பலத்த காயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காரில் பயணம் செய்தவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இதுகுறித்து கலசப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.