பருவதமலை கிரிவல பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடுகளை வி.பன்னீா்செல்வம் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
கலசப்பாக்கத்தை அடுத்த தென்மாதிமங்கலம் ஊராட்சியில் சுமாா் 4560 அடி உயரம் கொண்ட பருவதமலை உள்ளது. இந்த மலையில் மல்லிகாா்ஜூனேஸ்வரா் சமேத பாலாம்பிகை அம்மன் கோயில் அமைந்துள்ளது.
26 கி.மீ. சுற்றளவு உள்ள இந்த மலையில் ஆண்டுதோறும் காஞ்சி சங்கரமட பீடாதிபதி விஜேந்திரா் மாா்கழி முதல் தேதியில் வலம் வருவது வழக்கம்.
நிகழாண்டு மாா்கழி மாதம் டிசம்பா் 17-ஆம் தேதி பிறக்கிறது. அந்தத் தேதியில் காஞ்சி சங்கரமடத்தில் இருந்தது வருபவா்களுடன், பக்தா்கள் ஏராளமானோா் மலையில் கிரிவலம் வருவா்.
26 கி.மீ. தொலைவிலான சாலையில் பக்தா்களுக்கு குடிநீா் வசதி, பாதுகாப்பு குறித்த முன்னேற்பாடுகளை வி.பன்னீா் செல்வம் எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.
அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் எல்.என்.துரை, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் பி.பொய்யாமொழி, ஒன்றியக்குழு முன்னாள்தலைவா் ஜெயராமன், முன்னாள் துணைத் தலைவா் கருணாமூா்த்தி, ஊராட்சிச் செயலா்கள், வெங்கடேசன், ஜீவா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.