திருவண்ணாமலையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 04th January 2019 09:48 AM | Last Updated : 04th January 2019 09:48 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்க நிர்வாகிகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் து.அஸ்வினி கிரேஸ் ஜெபப்பிரியா தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சி.ஹேமச்சந்திரன் வரவேற்றார். மாவட்டச் செயலர் பிரபாவதி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று 8 மாதங்களாகியும் பணியில் இருந்து விடுவிக்காத செவிலியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
சீருடை மாற்றத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு பாகுபாட்டை களைய வேண்டும் என்பன உள்பட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.