திருவண்ணாமலையில் கிரிவலப்பாதை, ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.கந்தசாமி தொடக்கிவைத்தார்.
தேர்தல் ஆணையம் சார்பில், சிருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இவ்விரு மக்களவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவது குறித்தும், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, பங்குனி மாதப் பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு புதன்கிழமை வந்த பக்தர்களிடம் 100 சதவீதம் வாக்களிப்பீர்' என்ற முத்திரையுடன் கூடிய தரிசன டோக்கன்கள், பிரசாத துணிப் பைகளை மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.
திருவண்ணாமலை ஈசான்ய மைதானம் எதிரில் கிரிவலம் வந்த பல லட்சம் பக்தர்களிடம் மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தொடக்கிவைத்துப் பார்வையிட்டார்.
இதே இடத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு விடியோ பிரசார வாகனம் மூலம் கிரிவலம் வரும் பக்தர்கள், வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடும் நிகழ்வையும் ஆட்சியர் தொடக்கிவைத்தார்.
நிகழ்ச்சிகளில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மு.பிரதாப், கோட்டாட்சியர் ஸ்ரீதேவி, கோயில் இணை ஆணையர் ரா.ஞானசேகர் மற்றும் அரசு அலுவலர்கள், பக்தர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.