செங்கம், செய்யாறு, வந்தவாசி பகுதிகளில் ரூ.6.31 லட்சம் பறிமுதல்
By செங்கம்/ செய்யாறு/ வந்தவாசி, | Published On : 28th March 2019 09:40 AM | Last Updated : 28th March 2019 09:40 AM | அ+அ அ- |

செங்கம், செய்யாறு, வந்தவாசி பகுதிகளில் புதன்கிழமை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.6.31 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
செங்கம் அருகே திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சக்திவேல், காவல் உதவி ஆய்வாளர் புருசோத்தமன் மற்றும் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, தருமபுரியில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் இருந்த ரமேஷ் மனைவி ஹேமலதாவிடம் உரிய ஆவணமின்றி இருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இதேபோல, தானிப்பாடி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராம்பிரபு தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, காரில் வந்த பி.குயிலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி தனக்கோட்டியிடம் உரிய ஆவணமில்லாமல் இருந்த ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 2 இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.4.30 லட்சத்தை செங்கம் வட்டாட்சியர் முன்னிலையில், செங்கம் கருவூலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
அப்போது, துணை வட்டாட்சியர்கள் துரைராஜ், முனுசாமி, தமிழரசி மற்றும் வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.
செய்யாறு: வெம்பாக்கம் - கலவை சாலையில் வடமாவந்தல் கிராமம் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் சாரதா, காவல் உதவி ஆய்வாளர் குப்பன் மற்றும் போலீஸார் அன்பு, பச்சையம்மாள் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, காரில் வந்த சென்னை பழைய பல்லாவரம் சுபம் நகரைச் சேர்ந்த கருணாகரனிடம் ரூ.58 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இந்தப் பணத்தை சித்தாத்தூர் கிராமத்தில் திருமண நிகழ்ச்சிக்காக கொண்டுவந்ததாக கருணாகரன் தெரிவித்தார்.
எனினும், உரிய ஆவணமில்லாததால், அந்தப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து செய்யாறு தொகுதி உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.அன்னம்மாளிடம் ஒப்படைத்தனர்.
வந்தவாசி: வந்தவாசி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தேர்தல் பறக்கும் படை அலுவலர் எஸ்.சேகர் தலைமையிலான குழுவினர், வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் உள்ள வெண்குன்றம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் வாகனச் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அந்த வழியாகச் சென்ற சிறிய ரக சரக்கு லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் தெள்ளாறை அடுத்த கூனம்பாடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் உரிய ஆவணங்களின்றி ரூ.1.43 லட்சத்தை எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...