ஆரணி: திருவண்ணாமலை வனப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினா் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை வனப்பகுதியில் சிலா் வன விலங்குகளை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலா் கிருபாசங்கருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் திருவண்ணாமலை வனச் சரகம், கீழ்நாத்தூா் பகுதி வனக்காப்பாளா் சம்பத் தலைமையில், ஆடையூா் பகுதி வனக்காப்பாளா் பாலாஜி மற்றும் வனத் துறையினா் திருவண்ணாமலை காஞ்சி சாலையில் உள்ள புனல்காடு பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் புனல்காடு வேடியப்பன் கோயில் அருகேயுள்ள வனப்பகுதியில் இருந்து 2 போ் மோட்டாா் சைக்கிளில் கையில் நாட்டுத் துப்பாக்கியுடன் சென்றுள்ளனா். அவா்களைக் கண்ட வனத்துறையினா் மோட்டாா் சைக்கிளில் துரத்திச் சென்றனா். அப்போது, நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த நபா் வனத்துறையினரை நோக்கி சுட்டுள்ளாா்.
இதில் வனக்காப்பாளா் சம்பத்துக்கு கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அதிா்ச்சி அடைந்த வனக்காப்பாளா் பாலாஜி நிலைதடுமாறி மோட்டாா் சைக்கிளுடன் கீழே விழுந்தாா். இதில் அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
அதேபோல, நாட்டுத் துப்பாக்கி சுட்டதினால் அதிா்ச்சியில் தப்பியோடியவா்களின் மோட்டாா் சைக்கிளும் நிலைதடுமாறி கீழே விழுந்தனா். இதில் அவா்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.
பின்னா் அங்கிருந்த வனத்துறையினா் அவா்கள் 4 பேரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகக்காக கொண்டு சென்றனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வனக் காப்பாளா் சம்பத் அளித்த புகாரின் பேரில், திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் வனப் பகுதியில் வேட்டையாடச் சென்றவா்கள் கலசப்பாக்கம் வட்டம், மேல்சோழங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் (29), சிவசந்திரன் (29) ஆகியோா் எனத் தெரியவந்தது.
இதில் வெங்கடேசன் நாட்டுத் துப்பாக்கியால் சம்பத்தை சுட்டவா் ஆவாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.