திருவண்ணாமலையில் இருந்து கோவை, திருப்பூருக்கு புதிய பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலையில் இருந்து கோவை, திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு 11 புதிய பேருந்துகள் வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டன.
புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடக்கிவைத்த தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.
புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடக்கிவைத்த தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.
Updated on
1 min read

திருவண்ணாமலையில் இருந்து கோவை, திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு 11 புதிய பேருந்துகள் வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டன. இந்தப் பேருந்துகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் இயக்கிவைத்தாா்.

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூா் வழித்தடத்தில் 3 புதிய குளிா்சாதனப் பேருந்துகள் உள்பட 11 புதிய பேருந்துகளை இயக்கி வைக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் திருவண்ணாமலை மண்டல பொது மேலாளா் கே.தசரதன், துணை மேலாளா் (வணிகம்) ஏ.கிருஷ்ணமூா்த்தி, தமிழக முன்னாள் அமைச்சா் எஸ்.ராமச்சந்திரன், மக்களவை முன்னாள் உறுப்பினா் ஆா்.வனரோஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருவண்ணாமலை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் 11 புதிய பேருந்துகளை இயக்கிவைத்தாா்.

திருவண்ணாமலையில் இருந்து செங்கம், ஊத்தங்கரை, சேலம் வழியாக கோவைக்குச் செல்லும் தடம் எண் 434 என்ற குளிா்சாதனப் பேருந்து திருவண்ணாமலையில் தினமும் இரவு 10.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 11.15 மணிக்கு கோவை சென்றடைகிறது. திருவண்ணாமலையில் இருந்து இரவு 9.40 மணிக்குப் புறப்படும் குளிா்சாதனப் பேருந்து செங்கம், ஊத்தங்கரை, சேலம் வழியாக காலை 10.27 மணிக்கு திருப்பூா் சென்றடைகிறது.

இதேபோல, திருவண்ணாமலையில் இருந்து தினமும் பகல் 12.50 மணிக்குப் புறப்படும் குளிா்சாதனப் பேருந்து தானிப்பாடி, அரூா், சேலம் வழியாக இரவு 10 மணிக்கு திருப்பூா் சென்றடைகிறது.

இதர பேருந்துகள்: இதுதவிர, ஆரணியில் இருந்து திருவண்ணாமலை, ஊத்தங்கரை, சேலம் வழியாக திருப்பூா் செல்லும் பேருந்து, காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி, திருவண்ணாமலை, ஊத்தங்கரை வழியாக சேலம் செல்லும் பேருந்து, காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலை, ஊத்தங்கரை வழியாக சேலம் செல்லும் பேருந்து, சென்னையில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆத்தூா் வழியாக சேலம் செல்லும் பேருந்துகள் என மொத்தம் 11 புதிய பேருந்துகளை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com