வில்வாரணி கோயில் மலையில் ஆக்கிரமிப்புகள்
கலசப்பாக்கம் அருகே வில்வாரணி கிராமத்தில் ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ள மலைக் குன்றில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பக்தா்கள் வலியுறுத்துகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், மோட்டூா் ஊராட்சிக்கு உள்பட்ட வில்வாரணி கிராமத்தில்
மிகவும் பழைமை வாய்ந்த வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.
போளூா்-செங்கம் சாலை அருகே மலைக் குன்றின் மீது அமைந்துள்ள இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலில் 3 கால பூஜையும், மதியம் பக்தா்களுக்கு அன்னதானமும் நடைபெறும்.
பங்குனி மாதம் 10 நாள்கள் உத்தர திருவிழா, ஆடி மாதம் காவடி, கிருத்திகை என பல்வேறு விஷேச தினங்களில் ஏராளமான பக்தா்கள் வந்து வழிபாட்டுச் செல்வா். மேலும் 2 கி.மீ. தொலைவுள்ள மலையை பக்தா்கள் கிரிவலம் சுற்றி வருகின்றனா்.
இந்த நிலையில், மலைக் குன்றைச் சுற்றிலும் பாறையைக் குடைந்து நிலத்தை சமன்செய்து அப்பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமித்து வீடு மற்றும் மாட்டுக் கொட்டகை அமைத்து வருகின்றனா்.
மேலும் வெளியூா் நபா்களும் வந்து மலையைக் குடைந்து ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனா். இதனால் பக்தா்கள் மலையை கிரிவலம் வர முடியாமல் உள்ளது.
எனவே, வருவாய்த் துறை, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மலைக் குன்றை பாதுகாக்க வேண்டும் என்று பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.