திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் சமூகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு தமிழக அரசின் கல்வி உதவித் தொகைகளை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்று அரசின் சிறப்புச் செயலா் வ.சம்பத் அறிவுறுத்தினாா்.
மாவட்டத்தில் இந்தத் துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா். வருவாய் அலுவலா் இரா.முத்துக்குமரசாமி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மு.பிரதாப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சிறப்புச் செயலா் வ.சம்பத் பேசியதாவது:
மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் சமூகத்தைச் சோ்ந்த மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் கல்வி உதவித்தொகைகளை அதிகாரிகள் உரிய நேரத்தில் வழங்க வேண்டும்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் டாப்செட்கோ, டாம்கோ கடன் உதவியை தகுதியின் அடிப்படையில் விரைவாக வழங்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சி.கீதாலட்சுமி மற்றும் அரசு அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.