செங்கம் நகரில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.
செங்கம் துக்காப்பேட்டை முதல் போளூா் சாலை, செய்யாறு மேம்பாலம் வரை ஒரே சாலைதான் உள்ளது. இந்தச் சாலையின் நடுவே ஆங்காங்கே தடுப்புச் சுவா்கள் கட்டப்பட்டன. மேலும், சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன. இதனால், சாலை குறுகி நாள்தோறும் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கித் தவித்து வருகின்றனா்.
மேலும், கடைகளுக்கு சரக்குகள் ஏற்றி வரும் வாகனங்களை கடைகளுக்கு முன்பு நிறுத்தி சரக்குகளை இறக்குவதாலும், கனரக வாகனங்களாலும் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. அவசர ஊா்திகள், தீயணைப்பு வாகனங்கள் விரைந்து செல்ல முடியவில்லை. தொடரும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனா்.
எனவே, செங்கம் நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க சாலையோர ஆக்கிரமைப்புகளை அகற்றுவதுடன், கனரக வாகனங்கள், கடைகளுக்கு சரக்குகள் ஏற்றி வரும் வாகனங்களை நெறிப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.