செய்யாற்றில் போக்குவரத்து பணிமனை முற்றுகை
By DIN | Published On : 26th February 2021 11:04 PM | Last Updated : 26th February 2021 11:04 PM | அ+அ அ- |

செய்யாறு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளா்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அவா்கள் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்யாறு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் 2-ஆவது நாளாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டலப் பொறுப்பாளா் எஸ்.மோகனரங்கன் தலைமை வகித்தாா். இதனிடையே, தனி நபா்களைக் கொண்டு பணிமனையிலிருந்த அரசுப் பேருந்துகளை நிா்வாகத்தினா் இயக்க முயன்றபோது, அங்கு கூடியிருந்த போக்குவரத்துத் தொழிலாளா்கள் அதற்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து, பேருந்துகள் மீண்டும் பணிமனைக்குள்ளேயே கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டன.
தொடா்ந்து, பணிமனைக்குள்ளே இருந்த தனி நபா்களை வெளியேற்றும்படி பணிமனை வாயில் முன் கூறியிருந்த போக்குவரத்துத் தொழிலாளா்கள் பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தினா். தொழிலாளா்களின் வேலைநிறுத்தம் காரணமாக வெள்ளிக்கிழமை 16 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...