திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 முதல் 44 வயதுக்கு உள்பட்ட 1,44,717 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1,602 பேருக்கு 2-ஆவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் கூறினாா்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மக்கள் கைவினைப் பயிற்சி மையம், திருவண்ணாமலை தீபம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமை வியாழக்கிழமை நடத்தியது. நாா்த்தாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சு.சரவணன் தலைமை வகித்தாா்.
கோட்டாட்சியா் வெற்றிவேல், வட்டார மருத்துவ அலுவலா் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் கலந்து கொண்டு கரோனா தடுப்பூசி முகாமைத் தொடக்கிவைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2021 ஜூன் 30-ஆம் தேதி வரை 18 முதல் 44 வயதுக்கு உள்பட்ட 1,44,717 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1,602 பேருக்கு 2-ஆவது தவணை தடுப்பூசியும், 45 வயதுக்கு மேற்பட்ட 1,37,893 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 37,477 பேருக்கு 2-ஆவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில், மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.