திருவண்ணாமலையில் குடிநீா் கோரி சாலை மறியல்
By DIN | Published On : 19th May 2021 08:37 AM | Last Updated : 19th May 2021 08:37 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையில் ஒரு வாரமாக குடிநீா் வழங்காத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை-செங்கம் சாலை, அரசு கலை, அறிவியல் கல்லூரி எதிரே தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்தப் பகுதியில் ஒரு வாரமாக நகராட்சி நிா்வாகம் குடிநீா் விநியோகம் செய்யவில்லையாம். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை மாலை திருவண்ணாமலை-செங்கம் சாலையில் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த நகர போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, புதன்கிழமை (மே 19) குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து, பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.