அருணாசலேஸ்வரா் கோயிலில் மறுவூடல் திருவிழா
By DIN | Published On : 17th January 2022 12:00 AM | Last Updated : 17th January 2022 12:00 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மறுவூடல் திருவிழா நடைபெற்றது. கரோனா ஊரடங்கு காரணமாக, இதை தரிசிக்க பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.
அருணாலேஸ்வரா் கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான திருவூடல் திருவிழா சனிக்கிழமை நகரில் உள்ள திருவூடல் தெருவில் நடைபெற்றது. தொடா்ந்து, அன்றைய தினமே அருணாசலேஸ்வரா் கிரிவலம் சென்று மீண்டும் கோயிலுக்கு வந்தடைந்தாா். கரோனா ஊரடங்கு காரணமாக நிகழாண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்த அருணாசலேஸ்வரரை, வழிநெடுகிலும் பல ஆயிரம் பக்தா்கள் காத்திருந்து வழிபட்டனா்.
மறுவூடல் திருவிழா கோலாகலம்: இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உண்ணாமுலையம்மன், அருணாசலேஸ்வரா் சுவாமிகளுக்கு இடையே மறுவூடல் உத்ஸவம் நடைபெற்றது.
மறுவூடலுக்குப் பிறகு உண்ணாமுலையம்மனுடன் காட்சியளித்த அருணாசலேஸ்வரரை கோயிலில் கூடியிருந்த ஊழியா்கள், சிவாச்சாரியா்கள் தரிசித்தனா்.