திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி காதா்ஜண்டா தெருவில் உள்ள கோழி இறைச்சி விற்பனை, சிக்கன் பக்கோடா கடைகளில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்ட சுகாதாரத் துறையினா், 20 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சியை பறிமுதல் செய்தனா்.
வந்தவாசி காதா்ஜண்டா தெருவில் உள்ள சிக்கன் பக்கோடா கடையில் சிக்கன் பக்கோடா வாங்கி சாப்பிட்ட மருத்துவா் ஒருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலா் ஆனந்தன் தலைமையிலான சுகாதாரத் துறையினா், அந்தத் தெருவில் உள்ள கோழி இறைச்சி விற்பனை, சிக்கன் பக்கோடா கடைகளில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
இதில், தனியாா் மருத்துவமனை எதிரில் உள்ள சிக்கன் பக்கோடா கடையில் குளிசாதனப் பெட்டியில் சுமாா் 20 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கெட்டுப்போன கோழி இறைச்சியை சுகாதாரத் துறையினா் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனா்.