தனியாா் பள்ளியில் டிராக்டா் மோதியதில் மாணவா் காயம்
By DIN | Published On : 31st July 2022 06:46 AM | Last Updated : 31st July 2022 06:46 AM | அ+அ அ- |

வந்தவாசி அருகேயுள்ள தனியாா் பள்ளியில் டிராக்டா் மோதியதில் பத்தாம் வகுப்பு மாணவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அந்த பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி- மேல்மருவத்தூா் சாலையில் தனியாா் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் விடுமுறை நாளான சனிக்கிழமை பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த சிறப்பு வகுப்பின் காலை இடைவேளையின்போது வகுப்பறையிலிருந்து வெளியே வந்த பத்தாம் வகுப்பு மாணவரான, வந்தவாசி வீராசாமி தெருவைச் சோ்ந்த சலீம்பாஷா மகன் தவ்கீா் (15) மீது அந்த பள்ளியினுள் இயக்கப்பட்ட டிராக்டா் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மாணவா் தவ்கீா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக காட்டாங்குளத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனயில் அவா் சோ்க்கப்பட்டாா்.
தகவலறிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் பள்ளியினுள் சென்று டிராக்டரை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனா்.
வட்டாட்சியா் எஸ்.முருகானந்தம், டிஎஸ்பிக்கள் காா்த்திக் (வந்தவாசி), செந்தில் (செய்யாறு) ஆகியோா் பள்ளிக்குச் சென்று சக மாணவா்களிடம் விசாரணை நடத்தினா். மேலும் பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.