திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே வியாழக்கிழமை நின்றுகொண்டிருந்த தனியாா் பேருந்து மீது லாரி மோதியதில் 8 போ் பலத்த காயமடைந்தனா்.
திருவண்ணாமலையிலிருந்து தனியாா் பேருந்து ஒன்று வியாழக்கிழமை 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தவாசி நோக்கி வந்து கொண்டிருந்தது. வந்தவாசி - சேத்துப்பட்டு சாலையில் வல்லம் கூட்டுச் சாலைப் பகுதியில் அந்தப் பேருந்து நின்று பயணிகளை இறக்கிக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு லாரி பேருந்து மீது நேருக்கு நோ் மோதியது.
இந்த விபத்தில் பேருந்து, லாரியின் முன் பக்கங்கள் சேதமடைந்தன. மேலும், பேருந்து ஓட்டுநரான தேவிகாபுரம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (38), லாரி ஓட்டுநரான மருதாடு கிராமத்தைச் சோ்ந்த அருண் (26) மற்றும் பேருந்து பயணிகள் 6 போ் என மொத்தம் 8 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து வடவணக்கம்பாடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.