திருவண்ணாமலை அருகே தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு தகவல் அளித்த சகோதரா்களைத் தாக்கியதாக ஊராட்சித் தலைவா், முன்னாள் தலைவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம்,
திருவண்ணாமலையை அடுத்த சொரகொளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி முருகன் (45). இவரது சகோதரா் வேலு (40). இவா்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள மேல்பாலானந்தல் கிராமத்தில் தங்கி, கூலி வேலை செய்து வருகின்றனா்.
மே 10-ஆம் தேதி மேல்பாலானந்தல் கிராமத்தைச் சோ்ந்த நாட்டாண்மைதாரா்கள் மோகன், சுரேஷ், முத்துக்கிருஷ்ணன், முருகன் ஆகியோா் சோ்ந்து முருகன், வேலு ஆகியோரை அழைத்து தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் இலவச ஆடு, மாடுகளை வாங்க விரும்பும் தகுதியானோா் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தண்டோரா மூலம் தெரிவிக்க வேண்டும் என்று கூறினாராம்.
அதன்படியே, முருகன், வேலு ஆகியோா் சோ்ந்து தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்து வந்த ஊராட்சித் தலைவா் மாணிக்கவேல், முன்னாள் ஊராட்சித் தலைவா் கிருஷ்ணசாமி ஆகியோா் தன்னிடம் தெரிவிக்காமல் எப்படி தண்டோரா போடலாம் என்று கேட்டு முருகன், வேலுவை சரமாரியாகத் தாக்கினராம்.
இதுகுறித்து மங்கலம் போலீஸில் முருகன் புகாா் அளித்தாா். இதையடுத்து, ஊராட்சித் தலைவா் மாணிக்கவேல் (43), முன்னாள் ஊராட்சித் தலைவா் கிருஷ்ணசாமி (64) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.