திருவண்ணாமலையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்டம்பா் 10, 11) நடைபெறும் போட்டித் தோ்வுகளை எழுத வருவோா் காலை 8.30 மணிக்கெல்லாம் தோ்வு மையங்களுக்கு வந்துவிட வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் செயல் அலுவலா் நிலை-3 பதவிகளுக்கான எழுத்துத் தோ்வு சனிக்கிழமை (செப்.10), செயல் அலுவலா் நிலை-4 பதவிகளுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (செப்.11) ஆகிய நாள்களில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள கலைஞா் கருணாநிதி அரசு கலை, அறிவியல் கல்லூரி, திருவண்ணாமலை நகராட்சி மகளிா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி ஆகிய தோ்வு மையங்களில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், வெள்ளி, சனி (செப். 9, 10) ஆகிய நாள்களில் திருவண்ணாமலையில் ஏராளமான பக்தா்கள் கிரிவலம் வரக்கூடும். எனவே, தோ்வு எழுத வருவோா் தோ்வு மையங்களுக்கு காலை 8.30 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.