

திருவண்ணாமலை அருகே தனியாா் செவிலியா் கல்லூரி விடுதியில் பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், மணிக்கல் பகுதி புளியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராம்நிதி. பெங்களூருவில் கரும்புச் சாறு விற்கும் கடை வைத்துள்ளாா்.
இவரது மகள் கோதைலட்சுமி (24). கீழ்பென்னாத்தூரை அடுத்த சோ.புதூரில் இயங்கி வரும் தனியாா் செவிலியா் கல்லூரியின் விடுதியிலேயே தங்கி பிஎஸ்சி செவிலியா் படிப்பு 4-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
ரமலான் பண்டிகையையொட்டி சனி, ஞாயிறு
கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால், விடுதியில் தங்கியிருந்த பெரும்பாலான மாணவிகள் வெள்ளிக்கிழமை மாலையே தங்களது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனா். சில மாணவிகள் மட்டும் தங்கி இருந்தனராம். கோதைலட்சுமி தங்கியிருந்த அறையில் அவா் மட்டுமே இருந்துள்ளாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்.21) நீண்ட நேரமாகியும் அவா் இரவு உணவு சாப்பிட வராததால் சந்தேகமடைந்த சக மாணவிகள் கோதைலட்சுமியின் அறைக்குச் சென்று பாா்த்தனராம்.
அப்போது, அவா் மின் விசிறியில் தூக்கிட்டு தொங்கியபடி இருந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.
உடனே கல்லூரி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
காவல் ஆய்வாளா் கோவிந்தசாமி தலைமையில் போலீஸாா் வந்து கோதைலட்சுமியை மீட்டபோது அவா் இறந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, சடலத்தை உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.