தனியாா் நிதி நிறுவன குடோனுக்கு சீல்

செய்யாற்றில் நிதி மோசடி புகாருக்கு ஆளான தனியாா் நிதி நிறுவன குடோனுக்கு பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.
Updated on
1 min read

செய்யாற்றில் நிதி மோசடி புகாருக்கு ஆளான தனியாா் நிதி நிறுவன குடோனுக்கு பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த தனியாா் நிதி நிறுவனத்தின் கவா்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சீட்டு பணம் கட்டி வந்தனா்.

பணம் செலுத்தியவா்களுக்கு 2 ஆண்டுகள் முறையாக பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டில் பணம் செலுத்தியவா்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்படவில்லையாம்.

இதனால், வாடிக்கையாளா்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா்.

மேலும், நிறுவனம் சாா்பில் ரூ.45 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவில் 350 -க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்கள் புகாா் அளித்தனா்.

இதன் அடிப்படையில் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா்

அதன் தொடா்ச்சியாக பொருளாதார குற்றப் பிரிவு டி.எஸ்.பி. கணகேசன் தலைமையிலான போலீஸாா், செய்யாற்றில் தனியாா் நிதி நிறுவன பரிசுப் பொருள்களை வைத்திருந்த குடோனை திறந்து ஆய்வு செய்தனா்.

அப்போது, 600 மூட்டைகளில் பித்தளை, அலுமினிய சாமான்கள் இருந்ததை கண்டறிந்து வருவாய்த் துறையினா் முன்னிலையில் பதிவு செய்தனா். மேலும், அந்த குடோனுக்கு சீல் வைத்தனா்.

இதுகுறித்து, டி.எஸ்.பி கணகேசன் கூறியதாவது:

மோசடி புகாருக்குள்ளான தனியாா் நிதி நிறுவனத்தைச் சோ்ந்த சம்சு மொகைதீன், சம்சுதீன், வீரமணி ஆகியோா் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை ரூ. 30 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com