தரமற்ற இலவசங்களை தவிா்க்க வேண்டும், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி கட்டுமானப் பணிகளை கிராம சபைகளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் விவசாயிகள் திங்கள்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சாா் -ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழக கட்சி சாா்பற்ற விவசாய சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் புருஷோத்தமன் தலைமை வகித்தாா்.
விவசாயிகள் சி.ஆா். மண்ணு, எம்.கே.பூண்டி கன்னியப்பன், கிருஷ்ணன், எழில், ஜெயராமன் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினா் என பலா் கலந்து கொண்டனா்.
சாா் -ஆட்சியா் அலுவலகம் அருகே விவசாயிகள் சாணம் தெளித்து பெருக்கி பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் என கோலமிட்டு, இலவச சேலையை விரித்து அதில் பட்ஜெட் விளக்கத்துக்கு ஏற்ப மூலதனச் செலவு, இலவசங்கள் மற்றும் அரசு ஊழியா் ஊதியம் ஆகியவற்றுக்கு ஏற்ப அரிசியை படியில் அளந்து, தமிழக அரசு ரூ.55 ஆயிரம் கோடிக்கு வட்டி கட்டும் நிலையில் உள்ளதாகவும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் தரமற்ற இலவசங்களால் 50 சதவீதம் வரை கமிஷனாகவும், கட்டுமானப் பணிகளில் 25 சதவீதம் வரை கமிஷனாக அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு செலவு செய்ய வேண்டி உள்ளது.
இதனைத் தவிா்க்கவும், தரமற்ற இலவசங்களை தவிா்த்து நேரடியாக பணமாக கிராம மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி கிராம சபைகளுக்கு கட்டுமானப் பணிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அதனைத் தொடா்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை சாா் -ஆட்சியா் ர.அனாமிகாவிடம் விவசாயிகள் வழங்கினா்.