

சேத்துப்பட்டு அருகேயுள்ள கோட்டுப்பாக்கம் பரதேசி ஆறுமுக சுவாமி கோயிலில் ஆடி அமாவாசையொட்டி, புதன்கிழமை குழந்தை வரம் வேண்டி ஆயிரக்கணக்கான பெண்கள் மண்டியிட்டு மண்சோறு சாப்பிட்டு வழிபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுக சுவாமி கோயில் உள்ளது.
இந்தக் கோயிலில், நிகழாண்டு ஆடி அமாவாசை தினத்தையொட்டி, புதன்கிழமை பரதேசி ஆறுமுக சுவாமிக்கு குருபூஜை மற்றும் அன்னதான விழா நடைபெற்றது.
காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னா், விபூதி வள்ளல் தனபால் சுவாமி அடியாா்களின் பஜனை ஊா்வலம் நடைபெற்றது.
கோயில் வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு மகா சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில், குழந்தை வரம் வேண்டிய பெண்கள் மற்றும் கோட்டுப்பாக்கம் பகுதி மக்கள் கலந்து கொண்டனா்.
நண்பகல் 12 மணிக்கு பரதேசி ஆறுமுக சுவாமிக்கு படையலிட்ட பிரசாதம் பரதேசி அடிகளாா் மூலம் குழந்தை வரம் வேண்டிய பெண்களுக்கு வழங்கப்பட்டது.
முந்தானையில் பிரசாதத்தை பெற்ற பெண்கள், கோயில் குளக்கரை படியில் பிரசாதத்தை வைத்து, மண்டியிட்டு இரண்டு கைகளையும் பின்புறம் கட்டிக் கொண்டு வேண்டுதல் நிறைவேற மண்சோறு சாப்பிட்டு ஆறுமுகசாமியை வழிபட்டனா்.
இதேபோன்று, கடந்த ஆண்டு மண் சோறு சாப்பிட்டு குழந்தை பாக்கியம் பெற்ற பெண்கள் குடும்பத்துடன் கோயிலுக்கு வந்து காணிக்கையாக எடைக்கு எடை நாணயம் வழங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.