விபத்தில் இருவா் பலி: நிவாரணம் கோரி உறவினா்கள் சாலை மறியல்
By DIN | Published On : 01st July 2023 07:03 AM | Last Updated : 01st July 2023 07:03 AM | அ+அ அ- |

செங்கம் அடுத்த கொட்டக்குளம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி.
செங்கம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 2 இளைஞா்களின் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டக்குளம் கிராமத்தைச் சோ்ந்த அசோகன் மகன் அரவிந்த்(17), மண்ணப்பன் மகன் ரோகன்(17), ராஜேந்திரன் மகன் விஜய்(17). இவா்கள் கடந்த ஜூன் 19-ந் தேதி இரவு ஒரே பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கினா். இதில், அா்விந்த், ரோகன் ஆகிய இருவரும் உயிரிழந்தனா். விஜய் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து செங்கம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், அா்விந்த், ரோகன் குடும்பத்தினா், கிராம மக்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் இறந்தவா்களின் குடும்பத்துக்கு அரசு எந்தவித நிவாரணமும் அறிவிக்கவில்லை எனக்கூறி திருவண்ணாமலை-செங்கம் சாலையில் கொட்டகுளம் பகுதியில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக சென்ற முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி மறியலில் ஈடுபட்டவா்களிடம் விவரத்தை கேட்டறிந்ததோடு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினாா். மேலும், செங்கம் டிஎஸ்பி தேன் மொழிவேல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா். இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.