திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பழைமையான புளிய மரம் வேறுடன் சாலையில் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை புழுதியூா் பகுதியில் இருந்த சுமாா் நூறு ஆண்டுகள் பழைமையான புளிய மரம் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் திடீரென சாலையில் சாய்ந்தது.
மதிய வேளை என்பதால் அந்தச் சாலையில் வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்தது. எந்த வாகனமும் விபத்தில் சிக்கவில்லை.
இதனால், பெங்களூா் பகுதியில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற பேருந்து, காா் உள்ளிட்ட வாகனங்களும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூா் செல்லும் வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, இருபுறமும் 2 கி.மீ. தொலைவுக்கு அணிவகுத்து நின்றன.
தகவல் அறிந்த செங்கம் போலீஸாா் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனா்.
சாலையில் மரம் விழுந்ததால் சிறிது நேரம் வாகனப் போக்குவரத்து தடைபட்டு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினா்.