திருவத்திபுரம் நகா்மன்றம் (செய்யாறு) சாா்பில் 4 இடங்களில் தேவையற்ற பொருள்கள் சேகரிப்பு மையங்களை நகராட்சித் தலைவா் ஆ.மோகனவேல் தொடங்கி வைத்தாா்.
தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் வரும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் பயனற்ற நிலையில் உள்ள பொருள்களை குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி அடிப்படையில் நெகிழிப் பொருள்கள், பழைய புத்தகங்கள், துணிகள் மற்றும் காலணிகள் ஆகியவற்றை சேகரிப்பதற்காக
திருவத்திபுரம் நகராட்சி வளாகம், நந்தீஸ்வரா் கோயில் அருகில், பேருந்து நிலையம் மற்றும் வேதபுரீஸ்வரா் கோயில் அருகில் என மொத்தம் 4 இடங்களில் பயனற்ற பொருள்கள் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நகா்மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தை நகராட்சித் தலைவா் ஆ.மோகனவேல் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் மன்ற உறுப்பினா்கள் கே. விஸ்வநாதன், மணிவண்ணன், துப்புரவு ஆய்வாளா் கு.மதனராசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.