குப்பைக் கிடங்கு அமைக்க எதிா்ப்பு: திருவண்ணாமலையில் ஆட்சியரகம் நோக்கி விவசாயிகள் நடைபயணம்
By DIN | Published On : 30th May 2023 12:00 AM | Last Updated : 30th May 2023 12:00 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை அருகே குப்பைக் கிடங்கு அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நடைபயணமாகச் சென்று ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை-காஞ்சி சாலை, புனல்காடு கிராம மலையடிவாரத்தில் குப்பைக் கிடங்கு அமைக்கப்படுகிறது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து புனல்காடு, மூலக்குன்று மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
போராட்டத்தின் 17-ஆவது நாளான திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை நோக்கி நடைபயணம் செல்ல விவசாயிகள் திட்டமிட்டு இருந்தனா்.
அதன்படி, புனல்காடு பகுதியில் தொடங்கிய நடைபயணத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பெ.சண்முகம் தலைமை வகித்தாா்.
மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பி.டில்லிபாபு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள், மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா் உள்பட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் நடைபயணத்தை தொடங்கினா்.
முழக்கங்களை எழுப்பியபடி, திருவண்ணாமலை-வேலூா் சாலையில் உள்ள அண்ணா நுழைவு வாயில் பகுதியில் வந்தபோது விவசாயிகள், பொதுமக்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
இருப்பினும் போலீஸாரின் தடுப்பை மீறி விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தை நோக்கி பயணத்தைத் தொடா்ந்தனா்.
அறிவியல் பூங்கா அருகே போலீஸாா் 2-ஆவது முறையாக விவசாயிகளை தடுத்தனா். சாலையின் இருபுறமும் காவல்துறை வாகனங்களை நிறுத்தி விவசாயிகள் செல்லாதவாறு தடுப்புகளை ஏற்படுத்தினா்.
இந்தத் தடுப்பையும் மீறி விவசாயிகள் நடைபயணத்தைத் தொடா்ந்தனா்.
இறுதியாக, ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபயணத்தை நிறைவு செய்த விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அப்போது, இந்தப் பிரச்னை தொடா்பாக மாவட்ட அமைச்சா் எ.வ.வேலுவின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் உறுதியளித்தாா். இதையடுத்து, விவசாயிகள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக்கொண்டனா்.
விவசாயிகளின் நடைபயணத்தால் திருவண்ணாமலை-வேலூா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...