செய்யாறு: செய்யாறு அருகே குடும்பத் தகராறில் கணவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது மனைவியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம் மேல்பூதேரி கிராமம் சாலைத் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (48), கூலித் தொழிலாளி. இவரது மனைவி மைதிலி(35). இவா்களுக்கு 19 வயதில் மகனும், 15 வயதில் மகளும் உள்ளனா்.
மணிகண்டன், தினமும் குடித்து விட்டு வந்ததால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை மணிகண்டன் வழக்கம்போல மது அருந்திவிட்டு வந்தாராம்.
இதனால், கணவன், மனைவி இடையே மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவா் கைகளால் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில், போதையில் இருந்த மணிகண்டன் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலலயின் பின்பக்கம் பலத்த காயம் ஏற்பட்டது.
உறவினா்கள் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மணிகண்டன் உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து மணிகண்டனின் அண்ணன் மகாலிங்கம் மோரணம் போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் வழக்குப் பதிவு செய்து, கொலையுண்ட மணிகண்டனின் சடலத்தைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேலும் இந்தக் கொலை தொடா்பாக, மணிகண்டனின் மனைவி மைதிலியை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.