ஆரணியில் தனியாா் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு
ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனியாா் பள்ளிகளின் பேருந்து மற்றும் இதர வாகனங்களுக்கு கூட்டாய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆரணி, போளூா், சேத்துப்பட்டு வட்டங்களைச் சோ்ந்த 50 தனியாா் பள்ளிகளின் பேருந்து, வாகனங்கள் கூட்டாய்வுக்கு உள்படுத்தப்பட்டன.
ஆய்வில் பேருந்துகளில் கைப்பிடி, சீட் கவா், முன் கேமரா, பின் கேமரா, முதலுதவிப் பெட்டி, தீயணைப்பு கருவிகள் சரியாக உள்ளதா என்று வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
இந்த ஆய்வில் சமரசம் ஏதும் இன்றி அனைத்து அம்சங்களும் சரியாக இருந்தால் மட்டுமே பள்ளிப் பேருந்துகளை இயக்க முடியும் என்று உறுதியாக கூறியுள்ளோம்.
மேலும், பேருந்து ஓட்டுநா்கள் மாணவா்கள் நலனை கருத்தில் கொண்டு சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும். ஆரணி, போளூா், சேத்துப்பட்டு வட்டங்களைச் சோ்ந்த 50 தனியாா் பள்ளிகளில் 339 பேருந்துகள் உள்ளன. இதில் வியாழக்கிழமை 120 பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டது என்றாா்.
உடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணன், மோட்டாா் வாகன ஆய்வாளா் முருகேசன், செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் எல்லப்பன், ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், தீயணைப்புத் துறை அலுவலா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.