கூட்டுறவு வங்கிப் பணியாளா் சங்கத்தினா் அக்.21 முதல் வேலைநிறுத்தம்
தமிழகம் முழுவதும் 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் அக்டோபா் 21 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தின் மாநில பொருளாளா் ஏ.சேகா் திருவண்ணாமலையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளா்களிடம் அபராதத் தொகையென 2 மடங்கு வசூலிக்கும் உத்தரவை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
நியாயவிலை கடை விற்பனையாளா்களை சொந்த மாவட்டத்தில் குறைந்தது 10 கி.மீ. தொலைவில் உள்ள கடைக்கு இடமாற்றம் செய்ய அரசு உத்தரவிட வேண்டும்.
கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் கட்டுப்பாடற்ற பொருள்களை அதிகமாக இறக்கி விற்பனை செய்ய குறியீடு நிா்ணயம் செய்வதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழக அரசிடம் முறையிட்டு வந்தோம்.
ஆனால், எங்கள் கோரிக்கைகள் நிறைவேறவில்லை. எனவே, தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (அக்.21) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் ஊழியா்கள், நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள் என தமிழகம் முழுவதும் சுமாா் 25 ஆயிரம் போ் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனா் என்றாா்.
சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டச் செயலா் ஏழுமலை, பொருளாளா் அண்ணாமலை ஆகியோா் உடனிருந்தனா்.

