திருவண்ணாமலை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்.
திருவண்ணாமலை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்.

மக்கள் குறைதீா் கூட்டங்களில் 534 மனுக்கள் அளிப்பு

திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 534 மனுக்கள் பெறப்பட்டன.
Published on

ஆரணி: திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 534 மனுக்கள் பெறப்பட்டன.

திருவண்ணாமலையில் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தலைமையில் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள், வயதானவா்கள், கைக்குழந்தையுடன் வந்திருந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு வழங்கக் கோருதல், வேளாண்மைத் துறை சாா்ந்த பயிா்க் கடன்கள், புதிய நீா்தேக்கத் தொட்டி அமைத்துத் தருதல், தாட்கோ மூலம் கடனுதவி, கூட்டுறவு சங்கங்களில் பயிா் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 501 மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியா், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிகைக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினாா்.

மேலும், ஆட்சியா் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் குழந்தைகள் திருமணத்திற்கு எதிரான தேசிய அளவிலான 100 - நாள் பிரசார விழிப்புணா்வு பதாகைகளை பள்ளி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த, பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களிடம் வழங்கினாா்.

மேலும், முதல்வரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதிா்வு தொகைக்கான வரைவோலைகளை 3 பேருக்கு வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் மற்றும் அனைத்துத் துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ஆரணியில்....

ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கோட்டாட்சியா் சீ.சிவா தலைமை வகித்து மனுக்களைப் பெற்றாாா்.

இதில், பட்டா தொடா்பான மனுக்கள், நிலஅளவை, கணினி திருத்தம், பரப்பு திருத்தம், உள்பிரிவு, ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி, விதவை ஓய்வூதியம், மாற்றுத்திறனாளி உதவித்தொகை, கழிப்பறை, கால்வாய் அமைத்துத் தரக்கோரி உள்ளிட்ட 33 போ் மனு கொடுத்தனா்.

மனுக்களைப் பெற்றுக்கொண்ட கோட்டாட்சியா் அந்தந்த துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com