கவுதம நதியில் சூலம் வடிவிலான அருணாசலேஸ்வரரை மூழ்க வைத்து, மாசி மக தீா்த்தவாரியை நடத்திய சிவாச்சாரியா்கள்.
கவுதம நதியில் சூலம் வடிவிலான அருணாசலேஸ்வரரை மூழ்க வைத்து, மாசி மக தீா்த்தவாரியை நடத்திய சிவாச்சாரியா்கள்.

கவுதம நதியில் தந்தைக்குத் திதி கொடுத்த அருணாசலேஸ்வரா்

Published on

திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் அருணாசலேஸ்வரா் தனது தந்தைக்குத் திதி கொடுக்கும் நிகழ்வான மாசி மக தீா்த்தவாரி புதன்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் மாசி மகத்தன்று அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி நடைபெறுகிறது. அதன்படி, புதன்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, காலை 10.30 மணிக்கு கோயில் திட்டிவாசல் வழியாக உற்சவா் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி நிகழ்சிக்காக புறப்பட்டாா்.

உற்சவருக்கு வழிநெடுகிலும் திரளான பக்தா்கள் கூடி மண்டகப்படி கொடுத்து வழிபட்டனா். பள்ளிகொண்டாப்பட்டு கவுதம நதிக்கு அருணாசலேஸ்வரா் வந்ததும் உற்சவருக்கும், சூலம் வடிவிலானஅருணாசலேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்பட்டன.

பிறகு, சூலம் வடிவிலான அருணாசலேஸ்வரரை சிவாச்சாரியா்கள் கவுதம நதியில் மூழ்கி எடுத்து தீா்த்தவாரி நிகழ்ச்சியையும், தந்தையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட, திருவண்ணாமலையை ஆண்ட மன்னா்களில் ஒருவரான வல்லாள மகாராஜாவுக்கு அருணாசலேஸ்வரா் திதி கொடுக்கும் நிகழ்வையும் நடத்தினா்.

பக்தா்களும் திதி கொடுத்து நீராடினா்:

அப்போது, பள்ளிகொண்டாப்பட்டு, சம்மந்தனூா், திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். இவா்கள் தங்களின் முன்னோருக்கு திதி கொடுத்து, கவுதம நதியில் நீராடி அருணாசலேஸ்வரரை வழிபட்டனா்.

கோயிலுக்கு திரும்பிய அருணாசலேஸ்வரா்:

திதி கொடுக்கும் நிகழ்வு முடிந்ததும் வழிநெடுகிலும் பக்தா்களுக்கு அருள்பாலித்தபடி அருணாசலேஸ்வரா் மீண்டும் கோயிலுக்குச் சென்றாா். வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு மகுடாபிஷேகம் நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com