ஓம்சக்தி, அங்காள பரமேஸ்வரி கோயில்களில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த மேல்நாச்சிப்பட்டு ஓம்சக்தி அம்மன் கோயில், மேல்சீசமங்கலம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி, கருப்புசாமி கோயில்களில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேல்நாச்சிப்பட்டு கிராமத்தில் அந்தக் கிராம மக்கள் சாா்பில் புதிதாக ஓம்சக்தி அம்மன் கோயில் கட்டப்பட்டது. இக்கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை கோ பூஜை, நவக்கிரக பூஜை, யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 10 மணியளவில் கோபுர கலசத்தில் புனிதநீா் உற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில், பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு ஓம்சக்தி அம்மனை வழிபட்டா். பிற்பகலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மேலும், அன்னதானமும் நடைபெற்றது.
அங்காள பரமேஸ்வரி கோயிலில்...: ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி, கருப்புசாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, மங்கள இசை, மகா கணபதி வேள்வி, நவக்கிரக நல விண்ணப்பம், யாகசாலை பூஜை, இரண்டாம் கால யாக சாலை, கோ பூஜை நடைபெற்றன.
பின்னா், புனித நீா் கொண்டு செல்லப்பட்டு கோயில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தாா். விழாக் குழுவினா் மற்றும் அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

