2 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன 50 பவுன் நகையை மீட்டுத் தரக்கோரி சாலை மறியல்
திருவண்ணாமலையை அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருடு போன சுமாா் 50 பவுன் தங்க நகைகளை விரைவாக கண்டுபிடித்துத் தருமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை செங்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த தனியாா் பள்ளி ஆசிரியா் சரவணன். இவரது வீட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 50 பவுன் நகைகள் திருடிய மா்ம நபா்கள் குறித்து பல்வேறு ஆதாரங்களை அளித்தும் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஏற்பட்டு வருவதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சரவணன் குடும்பத்தாா் 20-க்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமை கைத் குழந்தைகளுடன் திருவண்ணாமலை மேற்கு காவல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். தொடா்ந்து, அவா்கள் காவல்துறையினரை கண்டித்து செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது, சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் காவல்துறையினா் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். இதையடுத்து போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்குள் அழைத்துச் செல்ல முயன்றனா்.
அப்போது, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நிகழ்ந்தது. இதனால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் காவல் ஆய்வாளா் காலிலேயே விழுந்து கதறி அழுதனா்.
பின்னா், காவல் துணை ஆய்வாளா் தீக்குளிக்க முயற்சித்தவா்களை காவல் நிலையத்துக்குள் அழைத்துச் சென்றபோது ஆய்வாளா் அவா்களை தடுத்து நிறுத்தியதால் ஆய்வாளருக்கும், உதவி ஆய்வாளா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் கூறுகையில், எங்களது நான்கு குடும்பங்களும் மாடு மேய்த்து, 100 நாள் வேலைக்குச் சென்று கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த 54 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்து, நம்பி இருந்தும் இன்று வரை நகைகள் மீட்கப்படாமல் உள்ளது.
மேலும், திருட்டுச் சம்பவம் குறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகாா் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தனா்.

