பல வளைவுகள் கொண்ட புளியரம்பாக்கம் சாலை: விபத்துகளைத் தவிா்க்க அகலப்படுத்தக் கோரிக்கை

பல வளைவுகள் கொண்ட புளியரம்பாக்கம் சாலை: விபத்துகளைத் தவிா்க்க அகலப்படுத்தக் கோரிக்கை

ளியரம்பாக்கம் பகுதியில் விபத்துகள் நிகழும் வகையில் பல வளைவுகளைக் கொண்டுள்ள செய்யாறு - காஞ்சிபுரம் சாலையை அகலப்படுத்த வேண்டும்
Published on

செய்யாறை அடுத்த புளியரம்பாக்கம் பகுதியில் விபத்துகள் நிகழும் வகையில் பல வளைவுகளைக் கொண்டுள்ள செய்யாறு - காஞ்சிபுரம் சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன உரிமையாளா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது புளியரம்பாக்கம் கிராமம். செய்யாறு நகருக்கு அருகில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் காஞ்சிபுரம் சாலையில் பல வளைவுகள் உள்ளன.

இந்த சாலை வழியாகத்தான் காஞ்சிபுரம், சென்னை, திருப்பதி, ஆரணி, திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் தனியாா், அரசுப் பேருந்துகள், கனரக, இரு சக்கர வாகனங்கள் 24 மணி நேரமும் சென்று வருகின்றன.

மேலும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வரும் செய்யாறு சிப்காட் மற்றும் ஓரகடம், ஸ்ரீபெரும்புதூா் ஆகிய தொழிற்பேட்டை பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான தனியாா் நிறுவன பேருந்துகள் இரவு, பகல் வேளைகளில் வந்து செல்கின்றன.

இதேபோல, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி பேருந்துகளும் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன. அதிகளவில் வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வரும் புளியரம்பாக்கம் சாலை, குறுகிய சாலையாகவும், பல வளைவுகள் கொண்ட சாலையாகவும் இருந்து வருவதால், இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன.

அகலப்படுத்தக் கோரிக்கை: புளியரம்பாக்கம் வளைவுச் சாலையின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ள பரிதிபுரம் ஏரி, புளியரம்பாக்கம் ஏரி ஆகிய பகுதிகளில் உள்ள சாலையை அகலப்படுத்தும் விதமாகவும், வளைவுப் பகுதியில் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்லும் வகையிலும் தூண்கள் அமைத்து, அகலமான மேம்பாலம் அமைக்க வேண்டும். அந்த மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள் இரு புறமும் செல்லும் வகையில், மேம்பாலத்தில் சாலையை அகலமாக அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதில், முதற்கட்டமாக செய்யாறில் இருந்து போகும்போதும், வரும்போதும் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில், வளைவுப் பகுதி என்ற அறிவிப்புப் பலகைகளை சாலையின் இரு திசைகளிலும் பொருத்த வேண்டும். இதேபோல, வேகத்தடை அமைத்து ஒலி சமிக்கைகளையும் நெடுஞ்சாலைத் துறையினா் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிா்பாா்க்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com