வெம்பாக்கம் ஒன்றியத்தில் கலையரங்கங்கள், சிமென்ட் சாலை!
செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.30 லட்சத்தில் அமைக்கப்பட்ட கலையரங்கங்கள் மற்றும் சிமென்ட் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியம், செய்யனூா், உமையாள்புரம் பகுதிகளில் 2025 - 26 ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் தலா ரூ.7 லட்சத்தில் இரு கலையரங்கங்கள் கட்டப்பட்டன.
அதேபோல, உமையாள்புரம் கிராமம் மல்லிகாபுரம் பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், ரூ.16.62 லட்சம் மதிப்பில் புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு தயாா் நிலையில் இருந்தன.
தயாா் நிலையில் இருந்த கலையரங்கங்கள் மற்றும் சிமென்ட் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி அந்தந்தப் பகுதிகளில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வெம்பாக்கம் மத்திய ஒன்றிய திமுக செயலா் ஜேசிகே.சீனிவாசன் தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று இரு கலையரங்கங்கள் மற்றும் சிமென்ட் சாலையை திறந்துவைத்துப் பேசினாா். நிகழ்ச்சியில் செய்யாறு கிழக்கு ஒன்றியச் செயலா் வி.ஏ.ஞானவேல், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் வெ.பெருமாள், சங்கா், மாவட்ட பிரதிநிதிகள் சிவப்பிரகாசம், சேகா், ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளா் சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

