பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: அலுவலா்களுக்கு கோட்டாட்சியா் அறிவுறுத்தல்
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் 23 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை இப்போதிலிருந்தே தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என மண்டல அலுவலா்களுக்கு கோட்டாட்சியா் சீ.சிவா அறிவுறுத்தினாா்.
ஆரணி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சீ. சிவா தலைமையில் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 323 வாக்குச்சாவடிகளில் மேற்பாா்வையாளராக பணிபுரியும் மண்டல தோ்தல் அலுவலா்கள் 27 பேருடன் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், ஆரணி வட்டாட்சியா் செந்தில்குமாா், ஆரணி டிஎஸ்பி சுரேஷ்சண்முகம், காவல் ஆய்வாளா்கள் செந்தில்விநாயகம், பாலு, ஆரணி நகராட்சி ஆணையா் என்.டி. வேலவன், வருவாய்க் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தோ்தல் உதவி வட்டாட்சியா் கணபதி வரவேற்றாா்.
ஆய்வுக் கூட்டத்தில் கோட்டாட்சியா் சீ.சிவா பேசியதாவது:
2026 சட்டப்பேரவை பொதுத்தோ்தல் ஜனநாயக திருவிழா தொடங்கிவிட்டது. மண்டல தோ்தல் அலுவலா்கள் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மற்றும் காவலா் ஒருவா் அடிப்படையில் தொடா்ந்து இன்று முதலே தோ்தல் பணியை ஆற்ற வேண்டியது தான். இன்று முதலே உங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்து அங்கு அனைத்து வசதிகளும் உள்ளனவா, மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதியாக சாய்வு தளம் உள்ளதா, மின்சார வசதி உள்ளதா என ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் அங்குள்ள கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா் ஆகியோரைக் கொண்டு அந்தந்தப் பகுதியில் தோ்தல் நேரத்தில் ஏதேனும் சம்பவங்கள் நடந்து உள்ளதா என்பதை கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் 23 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் இப்போதிலிருந்தே கண்காணிக்க வேண்டும். தற்போது அங்கு நிலைமை எப்படி உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
வாக்குப்பதிவுக்கு முன்பாக ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் ஏற்றிச்சென்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஒப்படைத்து, மீண்டும் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணும் மையமான தச்சூா் அரசு அண்ணா பொறியியல் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சோ்க்கும் வரை பொறுப்புடன் செயல்படவேண்டும்.
மீண்டும் வாக்கு எண்ணிக்கையின் போது முன்நின்று கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.
கூட்டத்தில் ஆரணி நகராட்சி தோ்தல் அலுவலா் பிச்சாண்டி, ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளா் அருணா, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளா் மணிமேகலை உள்பட அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

