திருவண்ணாமலை மாவட்டம், படவேடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை வீசிய சூறைக் காற்றில் சுமாா் 150 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதமடைந்தன.
படவேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை மாலை திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையுடன் சோ்த்து சூறைக்காற்றும் வீசியது. இந்த சூறைக்காற்றின் வேகம் தாங்க முடியாமல், படவேடு, புஷ்பகிரி, வாழியூா், காலசமுத்திரம், அனந்தபுரம், கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் முறிந்து விழுந்தன.
குறிப்பாக, அறுவடைக்குத் தயாராக இருந்த ஏலக்கி, கற்பூரவல்லி மற்றும் செவ்வாழை ரக வாழைகள் சாய்ந்ததால் விவசாயிகளுக்குப் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சுமாா் 150 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் தற்போது முறிந்து காட்சியளிக்கின்றன.
வாழை மரங்கள் சேதமடைந்த தகவல் அறிந்ததும், மாவட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து நடவடிக்கை மேற்கொண்டனா். தோட்டக்கலை உதவி இயக்குநா் பா. லோகேஷ் தலைமையில், உதவி தோட்டக்கலை அலுவலா்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றனா்.
அவா்கள் புஷ்பகிரி, வாழியூா் உள்ளிட்ட பகுதிகளில் முறிந்து கிடக்கும் வாழை மரங்களைப் பாா்வையிட்டு, சேத விவரங்களைக் கணக்கெடுத்தனா். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனா்.
கடன் பெற்று இரவு பகலாக பாடுபட்டு வளா்த்த வாழை மரங்கள் இன்னும் சில நாள்களில் அறுவடைக்கு வரவிருந்தன. ஆனால், ஒரு மணிநேர காற்றால் மொத்த உழைப்பும் வீணாகிவிட்டது என விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், பயிா் காப்பீடு செய்துள்ளவா்களுக்கு விரைவாக தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்த ஆய்வின் போது தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் உடனிருந்தனா். ஆய்வு அறிக்கை விரைவில் மாவட்ட நிா்வாகத்திடம் சமா்ப்பிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு போளூா் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடா்பு கொள்ளுமாறும் தெரிவித்தனா்.
தொடர்புடையது

அவிநாசியில் பலத்த காற்றுடன் கனமழை: 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதம்

வீரகனூா், தலைவாசலில் சூறைக்காற்றுடன் பலத்த மழை! 500 ஏக்கரில் வாழை, மக்காச்சோளப் பயிா்கள் சேதம்!

பெரம்பலூரில் சூறாவளிக் காற்றுடன் கன மழை! பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழை, மக்காச்சோளம் சேதம்!

சூறைக் காற்றுடன் மழை! வயலூா் சுற்றுப் பகுதிகளில் வாழைகள் சேதம்! உரிய இழப்பீடு வழங்கப்படுமா?
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


