விவசாய நிலத்துக்கு வழி கோரி ஆர்ப்பாட்டம்

விவசாய நிலத்துக்குச் செல்ல வழிகேட்டு முகுந்தராயபுரம் அரசு ஆட்டுப் பண்ணை வாயிலில் விவசாயிகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Published on
Updated on
1 min read

விவசாய நிலத்துக்குச் செல்ல வழிகேட்டு முகுந்தராயபுரம் அரசு ஆட்டுப் பண்ணை வாயிலில் விவசாயிகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராணிப்பேட்டை அருகே முகுந்தராயபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் அரசு ஆட்டுப்பண்ணை மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. ஆடுகளுக்குத் தேவையான தீவனம் வளர்ப்பதற்கான நிலங்களுடன் சேர்த்து சுமார் 340 ஏக்கர் பரப்பளவில் இந்த பண்ணை செயல்பட்டு வருகிறது.

தீவன வளர்ப்பு நிலங்களையொட்டி, நெல்லிகுப்பம், மோட்டூர் கிராம விவசாயிகளின் சுமார் 100 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக அரசு ஆட்டுப்பண்ணைக்கு சொந்தமான நிலத்தை சுற்றி இரும்புக் கம்பி வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் நெல்லிகுப்பம், மோட்டூர் கிராம விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் மேலும் கூறுகையில், வேலி அமைக்கப்பட்டுள்ள இடத்தில் ஏரி, மழைநீர் கால்வாய், மழைநீர் கசிவுநீர் குட்டைகள் உள்ளன. இவற்றை 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தூர்வாரி மழைநீரை தேக்கி நிலத்தடி நீரை பெருக்க வழியில்லை. 100 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல், கரும்பு, ராகி முதலியவற்றை அறுவடை செய்ய அறுவடை இயந்திரம், டிராக்டர் உள்ளிட்டவை செல்ல வழியில்லாததால் பயிர்கள் வீணாகும் நிலை உள்ளது. கால்நடைகளை எங்கள் நிலத்தில் மேய்க்கவும் வழியில்லை என்றனர்.

இந்நிலையில் தங்கள் நிலத்துக்குச் செல்ல வழிவிடக் கோரி அப்பகுதி விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 30-க்கும் மேற்பட்டோர் அரசு ஆட்டுப்பண்ணை வாயிலில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொருளாளர் நிலவு குப்புசாமி, துணைத் தலைவர் எல்.சி.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com