திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத் தொழிலாளர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூகறப்படுவது:
திருப்பதி அருகே ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவு போலீஸார் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த வனப்பகுதியில் 10 முதல் 10 செம்மரத் தொழிலாளர்கள் இருப்பதற்கான அடையாளங்கள் தெரிந்தன. இதையடுத்து, போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியதில், ஈத்தகுண்டா வனப்பகுதியில் தொழிலாளிகள் செம்மரக்கட்டைகளை எடுத்துச் செல்வதைக் கண்டனர்.
போலீஸாரைப் பார்த்ததும் தொழிலாளர்கள் செம்மரக்கட்டைகளைப் போட்டு விட்டு வனத்திற்குள் தப்பியோடினர். அவர்களை பின் தொடர்ந்து சென்று போலீஸார் ஒருவரைக் கைது செய்து, அவரிடம் இருந்து 12 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர் திருவண்ணாமலை மாவட்டம் பாதிரி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பது தெரிய வந்தது என்று போலீஸார் கூறினர்.