குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை
By DIN | Published On : 03rd July 2019 07:55 AM | Last Updated : 03rd July 2019 07:55 AM | அ+அ அ- |

அணைக்கட்டு அருகே 7 மாதக் குழந்தையை தண்ணீர்த் தொட்டியில் மூழ்கடித்துக் கொலை செய்துவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆற்காடு அருகே மேலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், மத்திய ரிசர்வ் படைக் காவலர். இவருக்கும் அணைக்கட்டு அருகே சத்தியமங்கலம் கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்த பவித்ராவுக்கும் (21) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சுரேஷ் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியாற்றி வருவதால், தனது 7 மாதக் கைக்குழந்தையுடன் பவித்ரா கொல்லைமேட்டில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு சுரேஷ் விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தபோது கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. பின்னர், சுரேஷ் பணிக்குத் திரும்பிவிட்டார். எனினும், குடும்பப் பிரச்னையால் பவித்ரா மனவேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு நீண்டநேரமாகியும் பவித்ரா தனது அறைக் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, தூக்கிட்ட நிலையில் பவித்ரா சடலமாகக் கிடந்தார். அவரது 7 மாதக் குழந்தை தண்ணீர்த் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீஸார் அங்கு விரைந்து சென்று சடலங்களைக் கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பவித்ரா, தனது குழந்தையைத் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருமணமாகி 2 ஆண்டுகளில் பெண் இறந்ததால் சார் -ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...