ஆம்பூர் அருகே ஊட்டல் காப்புக்காடுகளில் கன மழை: கானாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்

ஆம்பூர் அருகே ஊட்டல் காப்புக்காடுகளில் பெய்த கனமழை காரணமாக அப்பகுதி கானாற்றில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
Updated on
1 min read

ஆம்பூர் அருகே ஊட்டல் காப்புக்காடுகளில் பெய்த கனமழை காரணமாக அப்பகுதி கானாற்றில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி கிராமத்தையொட்டி ஊட்டல் காப்புக் காடுகளும், துருகம் காப்புக் காடுகளும் அமைந்துள்ளன. இக்காடுகள் அமைந்துள்ள பிக்கலமலை, சாரமலை, பைரவர் குட்டை, ஜவ்வூட்டல்மலை, தொம்மக்குட்டை, கரடிக்குட்டை, எர்ரகுண்டா மலைப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மதியம் கன மழை பெய்தது.
இதனால் பைரப்பள்ளி கொச்சேரி கானாறு,  ஊட்டல் கானாறுகளில் வெள்ளம் வந்தது. இந்த ஆண்டில் கொச்சேரி கானாற்றில் மூன்றாவது முறையாக வெள்ளம் வந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பைரப்பள்ளி, மிட்டாளம், மேல் மிட்டாளம், வன்னியநாதபுரம், கீழ்மிட்டாளம், பந்தேரப்பள்ளி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 20 நாள்களுக்கும் மேலாக இப்பகுதியில் மழை பொழியாத காரணத்தால் நிலக்கடலை பயிரிடும் விவசாயிகள் விதை போடாமல் அவதிப்பட்டு வந்தனர். தற்போது மழை பெய்துள்ளதால் திங்கள்கிழமை முதல் நிலக்கடலை விதை போட உள்ளனர்.
திருப்பத்தூரில்...
திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் திடீர் மழை பெய்தது. சுமார் 20 நிமிடங்கள் பெய்த மழையால் அப்பகுதியில் குளிர்ந்த சூழல் நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com