காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
காட்பாடி ரயில் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ரயில்களில் நகைக் கொள்ளை, திருட்டு, போதைப் பொருள்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதுதவிர, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தவறிவருவோர் பலர் காட்பாடி ரயில் நிலையத்தில் தஞ்சம் அடைகின்றனர்.
மேலும், ரயில் பாதையை கடக்கும்போது ரயில்களில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தொடரும் இச்சம்பவங்களைத் தடுக்க காட்பாடி ரயில்வே போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக ரயில்வே காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு, காட்பாடி ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, ரயில்வே காவல் நிலையத்துக்குச் சென்ற அவர், நிலுவையிலுள்ள குற்ற வழக்குகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, கண்டுபிடிக்கப்பட்ட நகைகள், வழிதவறி வந்தவர்களை காப்பகத்தில் சேர்க்கப்பட்ட விவரம், ரயிலில் அடிபட்டு உயிரிழப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ததுடன், வழக்குகளின் மீது விரைவான நடவடிக்கை எடுக்கவும் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
ரயில்வே காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் எழில்வேந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.