ஆசிரியர் தகுதித் தேர்வு: மாவட்டத்தில் 11,480 பேர் முதல் தாளை எழுதினர்
By DIN | Published On : 09th June 2019 12:19 AM | Last Updated : 09th June 2019 12:19 AM | அ+அ அ- |

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளை வேலூர் மாவட்டத்தில் 11,480 பேர் எழுதினர்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு சனிக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடக்கிறது. சனிக்கிழமை நடைபெற்ற முதல் தாளுக்கான தேர்வுக்கு வேலூர் மாவட்டத்தில் 37 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில் தேர்வு எழுத மாவட்டம் முழுவதும் 238 மாற்றுத் திறனாளிகள் உள்பட 12,587 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 11,480 பேர் தேர்வு எழுதினர். 1,107 பேர் தேர்வு எழுதவில்லை.
இந்தத் தேர்வுப் பணியில் இயக்குநர் தலைமையில் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் உள்பட மொத்தம் 1,500 பேர் ஈடுபட்டிருந்தனர்.
தொடர்ந்து, இரண்டாம் தாளுக்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு மாவட்டம் முழுவதும் 393 மாற்றுத் திறனாளிகள் உள்பட 21,720 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு எழுத 62 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.