குடியாத்தம் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள எம்எல்ஏ அலுவலகம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ஜெயந்திபத்மநாபன் குடியாத்தம் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கவே, எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து எம்எல்ஏ அலுவலகமும் பூட்டி "சீல்' வைக்கப்பட்டது.
இந்நிலையில் குடியாத்தம் பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த எஸ்.காத்தவராயன் வெற்றிபெற்றார். இதைத் தொடர்ந்து எம்எல்ஏ அலுவலகம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலரும், அணைக்கட்டு எம்எல்ஏவுமான ஏ.பி. நந்தகுமார் தலைமை வகித்தார். குடியாத்தம் நகர திமுக பொறுப்பாளர் எஸ். சௌந்தரராஜன் வரவேற்றார். திமுக பொருளாளர் துரைமுருகன் அலுவலகத்தைத் திறந்து வைத்தார். எம்எல்ஏக்கள் ஆர். காந்தி (ராணிப்பேட்டை), ப. கார்த்திகேயன் (வேலூர்), முன்னாள் எம்.பி. முகமதுசகி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.