3-ஆவது நாளாக வருவாய்த் துறை அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
By DIN | Published On : 06th March 2019 11:50 PM | Last Updated : 06th March 2019 11:50 PM | அ+அ அ- |

தேர்தலையொட்டி வேறு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 3-ஆவது நாளாக புதன்கிழமையும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் வட்டாட்சியர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள், போலீஸார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த
வகையில், வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் வட்டாட்சியர்கள் 11 பேர் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டனர். இதேபோல், தமிழகம் முழுவதும் வருவாய்த் துறையினர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் அந்தந்த வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுனர். வேலூர் மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டம் 3-ஆவது நாளாக புதன்கிழமையும் நடைபெற்றது. இதில், ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தால் வருவாய்த் துறை சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டன.