வாக்கு எண்ணும் மையங்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்
By DIN | Published On : 28th March 2019 02:52 AM | Last Updated : 28th March 2019 02:52 AM | அ+அ அ- |

வேலூர், அரக்கோணம் மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களைத் தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மக்களவைத் தேர்தலையொட்டி வேலூர் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் வேலூர் அருகே பாகாயத்தில் உள்ள தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியிலும், அரக்கோணம் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் வாலாஜாபேட்டையில் உள்ள ராணிப்பேட்டை பாலிடெக்னிக் கல்லூரியிலும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் ஆம்பூர், குடியாத்தம் (தனி) பேரவைத் தொகுதிகளுக்கு தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியிலும், சோளிங்கர் தொகுதிக்கு ராணிப்பேட்டை பாலிடெக்னிக் கல்லூரியிலும் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
இதனிடையே, மக்களவைத் தேர்தல், பேரவை இடைத்தேர்தலுக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பேரவைத் தொகுதி வாரியாக அனுப்பப்பட்டுள்ளன.
ஏப்ரல் 18-ஆம் தேதி மாலை வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்டு துணை ராணுவத்தினரின் பாதுகாப்பில் வைக்கப்படும். இதையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களைத் தயார்படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முதல்கட்டமாக, வாக்குப்பதிவு நிறைவடைந்து கொண்டு வரப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான அறைகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த அறைகளைச் சுற்றி 24 மணி நேரமும் கண்காணிக்க கேமராக்கள் பொறுத்தப்பட்டு, அரசியல் கட்சியினர் பார்வையிட அவை பெரிய திரையில் ஒளிபரப்பப்படும்.
மேலும், அந்த அறைகளைச் சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்படும். தொடர்ந்து, வாக்கு எண்ணும் அறைகளைத் தயார்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...