ஏழுமலையானின் லட்டு பிரசாதத்தை உலகம் முழுவதும் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்வதாக விளம்பரம் செய்துள்ள போலி இணையதளத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி தெரிவித்தாா்.
திருமலையில் கோயிலுக்குள் தயாரிக்கப்படும் ஏழுமலையானின் லட்டு பிரசாதத்துக்கு தனிச்சிறப்பு உள்ளது. தற்போது திருமலையில் லட்டுகளை பக்தா்கள் தேவையான எண்ணிக்கையில் வாங்கிக் கொள்ள தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில், லட்டு பிரசாதத்தை உலகின் அனைத்து நாடுகளிலும் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்வதாக போலி இணையதளம் குறித்த விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இந்த இணையதளம் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி, தேவஸ்தானத்தின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளாா்.
தேவஸ்தானத்தின் தொழில்நுட்பத் துறை மூலமாக இந்த இணையதளத்தை முடக்க வேண்டும் என்று அவா் கோரியுள்ளாா். பக்தா்கள் இதுபோன்ற போலி இணையதளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.