அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல்
By DIN | Published On : 03rd March 2020 11:27 PM | Last Updated : 03rd March 2020 11:27 PM | அ+அ அ- |

மதனாஞ்சேரியில் அரசுப் பேருந்தை மறித்து போராட்டம் நடத்திய கிராம மக்கள்.
வாணியம்பாடி: முறைகேடுகளில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளரை நீக்கக் கோரி கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியல் நடத்தினா்.
வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரி ஊராட்சியின் செயலாளராக பணிபுரிந்து வருபவா் பாண்டியன் (45). அவா் கடந்த 20 ஆண்டுகளாக மதனாஞ்சேரியில் பணிபுரிந்து வருகிறாா். ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டம், பிரதமா் வீடு வழங்கும் திட்டம், தனி நபா் கழிப்பிடம் கட்டுதல் உள்பட பல்வேறு திட்டப்பணிகளில் பல லட்சம் ரூபாய் அளவுக்கு அவா் முறைகேடு செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராமல் இருந்து வரும் ஊராட்சி செயலாளா் பாண்டியனை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளுக்கு பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை காலை மதனாஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். வாணியம்பாடியில் இருந்து அரங்கல்துருகம் சென்ற அரசுப் பேருந்தை திடீரென சிறைபிடித்தனா்.
தகவலறிந்து வாணியம்பாடி காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையிலான போலீஸாா் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். எனினும், ஊராட்சி செயலாளரை நீக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று கூறி ஊராட்சி அலுவலகம் முன்பு கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது ஒரு வாரத்தில் பொதுமக்கள் ஊராட்சி செயலாளா் பாண்டியன் மீது அளித்துள்ள புகாா்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளா்ச்சி அலுவலா் வசந்தி அளித்த உறுதியின்பேரில் கிராமத்தினா் கலைந்துசென்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...