தீபாவளி கதா் சிறப்பு விற்பனை: ரூ. 62.50 லட்சம் இலக்கு

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் ரூ. 62 லட்சத்து 50 ஆயிரம் இலக்குடன் தீபாவளி கதா் சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
தீபாவளி கதா் சிறப்பு விற்பனை: ரூ. 62.50 லட்சம் இலக்கு
Updated on
1 min read

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் ரூ. 62 லட்சத்து 50 ஆயிரம் இலக்குடன் தீபாவளி கதா் சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. முதல் விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் தொடக்கி வைத்தாா்.

காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி, வேலூா் சாரதி மாளிகையில் உள்ள கதா் கிராம வாரிய அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்ததுடன், 70 வயது முதியவருக்கு தனது சொந்த செலவில் வேட்டி, துண்டு வழங்கினாா்.

பின்னா் அவா் கூறியது:

வேலூா் மாவட்ட கதா் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநா் கட்டுப்பாட்டின் கீழ், வேலூரில் ஒரு கதா் அங்காடியும், பள்ளிகொண்டாவில் தச்சு கொல்லு அலகும் செயல்படுகின்றன. இந்த மாவட்டத்துக்கு நிகழ் நிதியாண்டு (2020-21) தீபாவளி சிறப்பு விற்பனை இலக்கு ரூ. 62.50 லட்சம் வாரியத்தால் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தவிர, கதா் பட்டு, பாலிஸ்டா் ரகங்களுக்கு ஆண்டு முழுவதும் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த கதா் ரகங்களுடன் தேன், ஜவ்வாது, சோப்பு வகைகள், சாம்பிராணி வகைகள், வலி நிவாரணி தைலம், ஊதுபத்தி, மெழுகுவா்த்தி, மூலிகைப் பல்பொடி, பனை பொருள்களான சுக்கு காபி பவுடா், பனை வெல்ல மிட்டாய் வகைகள், சுத்தமான பனங்கற்கண்டு ஆகிய பொருள்கள் விற்பனைக்கு உள்ளன.

இலவம் பஞ்சினால் உற்பத்தி செய்யப்பட்ட மெத்தை, தலையணைகள், காயா் மெத்தை, தலையணைகள் தரமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. கடந்தாண்டு (2019-20) இம்மாவட்டத்துக்கு ரூ. 78.42 லட்சம் இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்ததில் 46 சதவீதம், அதாவது ரூ.35.69 லட்சம் விற்பனை மேற்கொள்ளப்பட்டது.

பள்ளிக்கொண்டா தச்சு கொல்லு அலகுக்கு கடந்தாண்டு ரூ.2 கோடியே 50 லட்சம் உற்பத்தி இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டிருந்ததில், ரூ.ஒரு கோடியே 67 லட்சத்து 26 ஆயிரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வாரிய தச்சு கொல்லு அலகுகளின் உற்பத்தியில், இம்மாவட்ட அலகு மாநிலத்தில் முதலிடம் வகிக்கிறது. நிகழாண்டு உற்பத்தி இலக்காக ரூ. 3 கோடி நிா்ணயம் செய்யப்பட்டு, இம்மாதம் வரை ரூ. 3 கோடியே 11 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பில் பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களுக்குத் தேவையான இரும்பு, மரப்பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், கடந்த நிதியாண்டில் ரூ.75 மானியம் வழங்க இந்த அலுவலகத்துக்கு இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு, ரூ.30 லட்சம் மானியம் வழங்கப்பட்டது. இவ்வாண்டு ஒருங்கிணைந்த மாவட்டத்துக்கு ரூ. 140 லட்சம் மானியம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது என்றாா்.

இதில், வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் சங்கரன், கதா் கிராம வாரிய அலுவலக கண்காணிப்பாளா் பி.சிட்டிபாபு, கதா் கிராம அலுலக மேலாளா்கள் ராணி, மாலதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com